| Posted in கவிதை | Posted on 5:34 PM
விடியல்.
வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.
விடியல்.
வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.
விடுமுறை இரவு,
விடியும்வரை மழை.
அணைக்க முடியவில்லை,
அலைபேசியில் அவள்..!
.
மனைவியை மறுபடியும்
காதலியாய் மாற்றியிருக்கிறது
பொல்லாத இந்த
மழைக்காலம்.!
.
தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை
நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).
இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
.
பெண்ணியவாத தோழி ஒருத்தி
கவிதை ஒன்று வரைந்தாள்.
விந்து, யோனி, புணர்ச்சி
எந்த வார்த்தைகளுமில்லை.
பெரிய தலைவனின்
"குறி"ப்புகளில்லை.
கடவுள் எவனும்
உடைபடவில்லை.
ஆடவரை இழிவுசெய்யும்,
மடமையுமில்லை.
உச்சகட்ட போதையின்
உளறல்கூட இல்லை.
ஏற்க முடியவில்லை.
நவீன பெண்ணியக் கவிதை.
கருத்தாழத்தோடு இருக்கிறதாம்,
முகம் சுளிக்காமல் படிக்கலாமாம். - என
என்னென்னவோ சொன்னாள்.
ஆனால்,
நவீன பெண்ணியத்தில்,
பாவம் என் தோழியின்,
"பேனா விலைபோகலை".
.
காருண்யம்
புகைப்பது தவறென்றான்
மாமிசம் உண்பவன்
இலை சைவம் தானே!
.
உறவுகளற்றவன் -ஆனால்
அனாதையில்லை.
அரசியல் பேசுவான் -ஆனால்
வாக்காளனில்லை.
எல்லாம் தெரிந்தவன் -ஆனால்
ஞானியில்லை.
மதுவிலக்கு பேசுவான் -ஆனால்
மதுவின்றி உறங்காதவன்.
கலாச்சாரம் கூட சொல்வான் -ஆனால்
சாரமற்றவன்.
கிரிக்கெட்டும், சினிமாவும்
சமூகமென்பான்.
குடும்பம்,காதல்,நட்பு -எல்லாம்
வியாபாரமாய்ப் பார்ப்பவன்.
அவன் யார்?
அவன் யார்?
அவன் யாரென,
தேடுபொறியை முடுக்குகிறாயா?
என் அருமை
கணிப்பொறி வல்லுனனே!
.
நான் பொதுவாய் நிறைய புத்தகங்கள் வாங்குவதுண்டு!
சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய உடனேயே படித்துவிடுவேன்.
பல புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே தூங்கிக்கொண்டிருக்கும்.
இன்றாவது படித்துவிட வேண்டும் என தினமும் நினைத்தாலும் கூட, சில மாதங்களுக்குப் பின்பே அந்த வாய்ப்பு கிட்டும்.
ஆனால் எனது பாட்டி (செஞ்சுரி அடிக்கப்போகிற வயசு)
இன்றும் நிறைய படிப்பார்.
நான் வாங்கி கிடப்பில் போட்டிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் அவர்தான் முதலில் படிப்பார். (சில புத்தகங்கள் விதிவிலக்கு)
எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்றால்,
சென்ற வாரம் வாங்கிய கேபிள் சங்கரின் புத்தகத் தலைப்பிற்கு,
என்னை மொழிபெயர்ப்பாளன் ஆக்கிய "கொடுமை" அவரையே சேரும்.
பாட்டி : என்ன பேரு இது? "லெமன் ப்ரீயும், இரண்டு ஷாப் பக்கீலாவும்?"
நான் : அது "ப" இல்ல "ட". "லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்".
பாட்டி : சரி அப்பிடீன்னா?
நான் : ம்ம்ம்ம்...... "எலுமிச்சை மரமும், இரண்டு கோப்பை மதுவும்" .
(என்ன கொடுமை சார் இது?)
(என்ன நினைத்தாரோ இதுவரை அந்த புத்தகத்தை தொடக்கூட இல்லை. ஒருவேளை "ஸீரோ டிகிரி" பாதிப்பாய்க்கூட இருக்கலாம்.)
ஒருவேளை இது சினிமா தலைப்பாக இருக்கும் பட்சத்தில், (இப்போ வேண்டாம்; இந்த விசயத்துக்கு கடைசியில் வருவோம்.)
லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
ஆசிரியர் : சங்கர் நாராயண்
பதிப்பு : நாகரத்னா பதிப்பகம்
விலை : ரூ 50௦/-
கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை, முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர், சென்னை –78
மேலதிக விபரங்களுக்கு,
கேபிள் சங்கர் : 9840332666
http://cablesankar.blogspot.com/
முதல் கதையிலேயே பிரமித்துப்போய், அதே உற்சாகத்தோடு, ஒரே மூச்சில் முழுவதும் படித்து முடித்த பின்பே கீழே வைத்தேன்.
சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, தேர்ந்த எழுத்து நடை. வாழ்த்துக்கள் சங்கர்ஜி.
புத்தகத்தை நிறைய பேர் துவச்சு, பிழிஞ்சு, கடைசியில் இஸ்திரி வேறு போட்டு விட்டதால், புதிதாய் நான் சொல்வதற்கு....,
எங்கே ஆரம்பித்து, எங்கே முடிக்க வேண்டும் என்கிற சூட்சமம் தெரிந்து வைத்திருக்கின்றார். கதையை நகர்த்தும் விதமும், வார்த்தைகளைக் கையாண்ட விதமும் அழகு.
எனக்குப்பிடித்த கதைகள்,
1. முத்தம்.
2. ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ்.
3. ராமி, சம்பத், துப்பாக்கி.
4. போஸ்டர்.
5. லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
6. தரிசனம்.
7. காமம் கொல்.
மொழி
தேவதை பேச ஆரம்பித்துவிட்டாள்
தயாரானான் மொழிபெயர்ப்பாளன்
மழலையின் தந்தை!
*
கனவு
உறங்கிய பின்பும் விடவில்லை
கட்டிப்பிடித்த கரடி பொம்மை
கனவில் பூச்சாண்டி!
*
எழுத்து,
வார்த்தை,
வாக்கியம்.
நீ,
நான்,
நம் காதல்!
*
நன்றி : யூத்புல் விகடன்
(இது யூத்புல் விகடனில் வெளியான எனது படைப்பு.)
எட்டாம் வகுப்பில் படிப்பு ஏறல,
அம்மா அதட்டினாள்,
ஒழுங்காய்ப் படி. இல்லேன்னா,
வட்டிக்கடை தான்.
பத்தாம் வகுப்பில் தோல்வி
பக்கத்து வீட்டு மாமாவின்,
கரிசன ஆலோசனை
வட்டிக்கடை.
படித்தவன் பிதற்றினான்,
பாவம் சேர்க்கும் இடங்களில் ஒன்று,
வட்டிக்கடை.
உறுதியாய் மறுத்தேன்
வேண்டாம் - இந்த
வட்டிக்கடை.
வறுமையில் உழைத்தவன்,
கால்வயிறு உணவையும்,
பிடுங்கித் தின்றது
வட்டிக்கடை.
மரணப் படுக்கையிலும்,
தூற்றினாள் ஊர்க்கிழவி
வட்டிக்கடை.
இந்த வருடம் எனக்குக் "கூட்டு"
என்ற நண்பனை,
பாவியென உமிழ்ந்தேன்
காரணம்,
வட்டிக்கடை.
ஆனால்,
கல்லூரிப் படிப்பிற்கென,
அப்பா ஏறி இறங்கினார் நிறைய
வட்டிக்கடை.
வேலை தேடுகையில்,
அன்னையின் தாலியையும்
அபகரித்ததுப் போனது,
வட்டிக்கடை.
மரியாதை நிமித்தம்,
ஊரையும் காலி செய்தோம்
காரணம்,
வட்டிக்கடை.
உடைந்துருகிய தருணத்தில்,
கிடைத்தது, வேலைக்கான கடிதம்.
"வங்கி அதிகாரி,
கடன் வழங்கும் பிரிவு."
இறுதியாய் மறுக்கவில்லை,
வேண்டாம் என - இந்த
வட்டிக்கடை.
எனது சிறுவயது பொங்கல் திருநாள் மிகவும் சுவாரஸ்யமானது. கொண்டாட்டங்கள் நிறைந்தது.
வீதியெங்கும் புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள், கரும்புக் கட்டுகளின் குவியல்கள், வர்ணம்தீட்டப்பட்ட புதுப் பானைகளை விற்கும் கடைகள் என, அந்த கிராமத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டத்தொடங்கிவிடும்.
"பொங்கல் வாழ்த்து" அட்டைகள் அந்நாளில் மிகவும் பிரபலமான ஒன்று.
பொங்கல் வாழ்த்து, உழவர் திருநாள், தமிழர் திருநாள், பொங்கலோ பொங்கல் என்ற வாசகங்களைத் தாங்கி, பல வண்ணப்படங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.
உழவன், ஏர், மாட்டு வண்டி ஓட்டி வரும் விவசாயி, பொங்கல் பானை சுற்றி கரும்புகள், குடும்பத்துடன் சூரிய வணக்கம் போன்ற படங்கள் அச்சிடப்பட்ட அட்டைகளுக்கு நல்ல வரவேற்ப்பு.
பிறிதொரு சமயத்தில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் படங்கள் இந்த படங்களையும் தாண்டி வசூலில் (?) சாதனை படைத்தது.
ஆனாலும் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்வது மகிழ்ச்சியான ஒன்றே.!
பொங்கல் திருவிழா மொத்தம் மூன்று நாட்கள். முதல் நாள் போகி, இரண்டாம் நாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்.
(நான்காம் நாளான காணும் பொங்கலை ஏனோ இவர்கள் கண்டுகொள்வதில்லை.)
அந்த ஊரின் ஒரு நற்பணி மன்றம், இந்த விழா நிகழ்ச்சிகளை எல்லாம் பொறுப்பேற்று (ஊர் முழுவதும் மைக் செட், தோரணம் என) தடபுடலாய் நடத்திக்கொண்டிருக்கும்.
போகி
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற பழமொழிக்கேற்ப, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.
இன்று தான் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். பலவித விளையாட்டுக்கள் உண்டென்றாலும், முதன்மையாய் இருப்பது "கபடி". அந்த பெரிய கிராமத்தைச சுற்றி உள்ள பல்வேறு சிறிய கிராமத்திலிருந்து பல அணிகள் கலந்து கொள்வார்கள்.
ஆட்டக்காரர்கள் மூச்சு விடாமல் "கபடிக் கபடி" என்று பாடிக்கொண்டிருப்பார்கள், சிலர் புதிது புதிதாய் வார்த்தைகள் சேர்த்துப் பாடிக்கொண்டிருப்பர்கள். முறுக்கிய மீசைகளும், திமிறிய தோள்களும் பாடுவதை அங்குதான் பார்க்க முடியும்.
கைதட்டல், விசில் என காதுகள் கிழிய பார்வையாளர்கள் இவர்களை உற்ச்சாகப் படுத்தி ஆரவாரம் செய்வார்கள். அங்கே ஒரு இளம் தமிழாசிரியர், "இந்த கபாடி போட்டியை நடாத்திக்கொண்டிருக்கின்ற" என்று ஒரு மாதிரியான தமிழில் நேரடி வர்ணனை செய்துகொண்டிருப்பார். அவருடைய வர்ணனையை கேட்ப்பதற்க்காகவே, பள்ளித் தோழர்களுடன் அங்கே செல்வதுண்டு.
அந்த நண்பகலில், அளவிற்கு அதிகமாய்க் கூட்டம், ஒரே கைதட்டல், பெருஞ்சத்தம், நிறைய தள்ளு முள்ளுகள், இவர்கள் ஏன் மைதானத்தை விட்டு சற்று தள்ளி விளையாடுகிறார்கள்? என்று எனக்குச் சந்தேகம். பிறகே விளங்கியது அந்த விளையாட்டு விபரீதமாகி, சில ஊர்க்காரர்கள் "மோதிக்" கொள்கிறார்கள் என்று.
ஒருவழியாய் அவர்கள் சமாதானமானபோது, நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன்.
பொங்கல்
தை மாதம் முதல் நாள். அதி காலையில் எழுந்து, புத்தாடை உடுத்தி, கரும்புகளுக்காக காத்திருக்கும் நேரம்.. சாமி கும்பிடாம சாப்பிடக்கூடாது என்ற அதட்டலுக்குப் பயந்து போய், வெளித் திண்ணையில் உட்கார்ந்து, படையலுக்கான ஏற்பாடுகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சூரியன் தான் எல்லா உயிரினத்துக்கும் ஆதாரம், அதனால் தான் முதலில் சூரிய வணக்கம் - என்றெல்லாம் பாட்டி கதை சொல்லிக்கொண்டிருப்பாள். ஆனாலும் கவனம் வெட்டப்படும் கரும்பின் மீதே இருக்கும்.
சரி வாங்க சாமி கும்பிடலாம். என்ற அழைப்பு கேட்டதும், ஓடிப் போய் முதல் ஆளாய் நிற்ப்பேன். அப்போதே பக்கத்து வீடுகளில், பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிடும்.
கோலப்போட்டி, சைக்கிள் ஸ்லோ ரேஸ், சாக்குப் பந்தயம், மியூசிக் சேர், ஊசியில் நூல் கோர்ப்பது, கயிறு இழுத்தல் என அன்றைய நிகழ்ச்சிகளின் பட்டியல் நீளும். அந்த ஊரின் கே.எஸ்.ராஜா, தனது கர்ண கொடூரமான குரலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருப்பார்.
(கே.எஸ்.ராஜா - எண்பதுகளில் மிகப்பிரபலமாக இருந்த / இன்றும் மறக்கமுடியாத வானொலி அறிவிப்பாளர்.)
மாலையில் பஞ்சாயத்தோடு ஒரு பரிசளிப்பு விழா.
மாட்டுப்பொங்கல்
மாட்டுப் பொங்கலின் அடையாளமே மஞ்சு விரட்டுதான். (ஜல்லிக்கட்டு)
வித விதமான வடிவங்களில், பல வண்ணங்களில், கொம்புகளோடு காளைகள்.அதன் வேகம், கம்பீரம், பயிற்சி, ஆபரணங்கள்.. (பாக்கறதுக்கே கொஞ்சம் டெர்ரர்ரா இருக்கும்.) அந்த மாடுகளை பிடிக்க வருகிறவர்கள் அதைவிட பயமுறுத்துவார்கள்.
பார்க்கப் போவதற்க்கே வீட்டில் நிறைய கெடுபிடி. சின்னப் பசங்க அங்கே எல்லாம் போகக் கூடாது - என்ற கண்டிப்பையும் மீறி, நண்பர்களின் உதவியால் கபடி மைதானத்தை அடைந்த போது, (கபடி மைதானத்தை கடந்து தான் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.) அங்கே ஜல்லிக்கட்டு வீரர்கள் மும்முரமாய் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
(அப்போதைய அரசு, மலிவு விலையில், ஒரு அதிநவீன முறையில், பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கியது மதுவை.)
அவர்கள் உரக்கப் பேசிக்கொள்வது, சண்டையிடுவது. சாராய நெடி என அந்த இடமே ஒருவித திகிலான அனுபவத்தைத் தந்ததால் பயந்து போய் வீடு திரும்பினோம்.
ஆனால், அந்த ஊரின் படித்த இளைஞர்கள், இதெல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்று, முந்தைய நாள் வெளியான திரைப்படத்திற்குச்சென்று விடுவார்கள். கல்வி அவர்களுக்கு வேறு விதமான கம்பீரத்தைக் கொடுத்திருந்தது! (அந்த கிராமத்திலிருந்து 22 கி.மீ செல்ல வேண்டும் திரைப்படம் பார்க்க)
நெருங்கிய குடும்ப நண்பர் வீட்டிலிருந்து மாட்டுப் பொங்கலுக்கான அழைப்பு. அவர்கள் வழக்கில் "பட்டிப் பொங்கல்". அன்றிலிருந்து பல வருடங்கள் அவரது தோட்டத்தில்தான் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம். மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து.. (நான் வேடிக்கை பார்ப்பதோடு சரி)
(விவசாயப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு அதிகம் அனுபவம் இருக்கும்.)
பின்னாளில்,
பள்ளிச் சீருடையே, பொங்கல் புத்தாடையாய் ஆனதற்காக, பிணங்கிக்கொண்டது ஒரு பொங்கல்...
சைக்கிள் கற்றுக்கொண்ட பின்பு, வீதி முழுவதும் கோலங்களை அழிப்பதே தொழிலாய் ஒரு பொங்கல்...
புதிதாய் மீசை வந்ததும், நண்பர்களோடு அலங்காநல்லூரில் ஒரு பொங்கல்... (வேடிக்கை பார்க்கத்தான்.)
அவளுக்கான காத்திருப்பில் அழகானதாய் ஒரு பொங்கல்...
வேலை தேடிய வெளிமாநிலத்தில் சங்கராந்தி என ஆரம்பித்து, ஊருக்குப் பயணமானது.. ஒரு பொங்கல்...
மேன்சன் காலங்களில், மாமி மெஸ்ஸில்.. தினமும் காலை வடையோடு, - ஒரு பொங்கல்... (என்ன கொடுமை சார்)
இன்று,
இன்றைய பொங்கல் அத்தனை சுவாரஸ்யமான பண்டிகையாய் இருப்பதில்லை.
உழவர் திருநாள் : பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் உழவனுக்குத் திருவிழா?
தமிழர் திருநாள் : தமிழனின் கதியோ தேசத்துக்கு வேறாய் இருக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டு : இனி வரும் எல்லா ஆண்டுகளிலும் தொடருமா? (ஆட்சி மாறினாலும்?)
செய்தி : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி இந்திய விலங்குகள் நல அமைப்பின் சார்பில் வழக்கு ஒன்று ...
நிறைய கேள்விகள், குழப்பங்களுக்கிடையே.. விடுமுறை என்பதால் 8 அல்லது 9 மணிக்கு எழுந்து, சம்பிரதாயத்துக்காக புத்தாடை, குக்கர் பொங்கல். மொபைலில் "Happy Pongal" SMS வாழ்த்து, அப்புறம் "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...", இடையிடையே சில தொலைபேசி அழைப்புகள்.. முடிந்தால் அருகிலிருக்கும் கோவில்.
நாமதான் இப்படி.. என்று கிராமத்திலிருக்கும் நண்பருக்கு போன் செய்து விசாரித்ததில்,
இன்னிக்கெல்லாம் கூட்டம் அதிகமா இருக்கும்கிறதால, நேத்திக்கே டாஸ்மாக்குல சரக்கு வாங்கியாச்சு, கோழி இன்னும் ரெடியாகல, அதுக்காக தான் வையிட்டிங்..
ரேட்டு கட்டுபடியாகல.. அதுனால தான் "காட்ட" இன்னும் விக்காம இருக்கேன்.
நம்ம ஊர்ல இந்த வருசமாச்சும் எதாவது பங்க்சன் வெக்கலாம்னு பாத்தா..
கோயில் திருவிழாவுக்கே, ரெகார்ட் டான்செல்லாம் போடக் கூடாதுன்னு போலீஸ் சொல்லிருச்சு..
(அப்போ மானாட மயிலாட?)
சேனல மாத்த உடாம இந்த பயபுள்ள ஒரே ஆர்ப்பாட்டம்.. இப்போதான் ஒரு கரும்பு வாங்கிக்குடுத்துட்டு ரிமோட்டப் புடுங்கிக்கிட்டுவந்தேன்.
(உபயம்: தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி)
____சேனல்ல நாளைக்கு அலங்காநல்லூர் லைவ் ப்ரோகிராம்?.
சரி மாப்ள ஊருக்கு வர்ற மாதிரி இருந்தா போன் பண்ணு ...
ஒரு எச்சரிக்கை:
கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் நன்றாக இருக்கும் என்று யாரேனும் அழைத்தால்... நம்பிப் போய் ஏமாந்து போகாதீர்கள்!.
அனேகமாக அடுத்த தலைமுறைக்கு, பொங்கல் திருநாள் என்பது, சென்ற நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை.
ஜல்லிக்கட்டு, இன்ன பிற எல்லாம், ஒரு கால கட்டத்தில் நடந்த வரலாறுச் சம்பவம் / செய்தியாய் அமையலாம்.
அரசு ஆவணக் காப்பகங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே எல்லோருக்கும்,
"பொங்கல் நல்வாழ்த்துக்கள்".
© All Rights Reserved. சிவப்ரியன்